வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நடிகரும், தவெக தலைவருமான விஜய் பெயரில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
இஸ்லாமியர்கள் தானமாக வழங்கும் சொத்துகளை வக்ஃபு வாரியம் நிர்வகித்து வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் வக்ஃபு வாரியம் செயல்பட்டு வருகிறது. இந்த வக்ஃபு வாரியத்தில் நிர்வாக சீர்த்திருத்தம் கொண்டு வருகிறோம் என்று கூறி மத்திய அரசு வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்தது.
இந்த மசோதாவுக்கு இஸ்லாமியர்கள், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்ப்புக்கு நடுவே கடந்த 3ம் தேதி நாடாளுமன்ற லோக்சபாவில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதேபோல் நாடாளுமன்ற ராஜ்யசபாவிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து கடந்த 8 ம் தேதி முதல் வக்ஃபு சட்ட திருத்தம் மசோதா சட்டமாக அமலுக்கு வருகிறது என்று மத்திய அரசு அறிவித்தது.
இதுதொடர்பாக மத்திய அரசு அரசிதழில் வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சட்டத்திருத்தத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று கூறி வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. 3 பேர் பலியாகி உள்ளனர்.
இதற்கிடையே தான் வக்ஃபு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக நடிகரும், தவெக தலைவருமான விஜய் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு தடை விதிக்க வேண்டும். மத்திய அரசு செயல்படுத்த கூடாது என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு என்பது விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட பல கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. அந்த வரிசையில் தற்போது நடிகர் விஜயும் இணைந்துள்ளார். முன்னதாக மத்திய அரசின் வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
அதில், ‛‛ஜனநாயகத்துக்கு எதிரான வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். ஏனென்றால் இந்த மசோதா என்பது மதசார்பற்ற இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை கொள்கைகளையும், அரசியலமைப்பின் மாண்பையும் மீண்டும் ஒருமுறை கேள்விக்கு உள்ளாக்கி உள்ளது.
அரசியலமைப்பு சட்டத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. வக்ஃபு வாரிய சட்டம் என்பது முஸ்லிம்களின் இறையியல் வாழ்வு மற்றும் சமூக பொருளாதாரத்தோடு பின்னிப் பிணைந்தது இஸ்லாமிய தனியுரிமை சட்டத்தின் முக்கிய அமைப்பு.
வக்ஃபு வாரிய சட்டத்தை சிதைப்பது என்பது சிறுபான்மையினருக்கு நம் அரசியலமைப்பும், நம் நாட்டின் தலைவர்களும் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் காற்றில் பறக்க விடுவதன்றி வேறென்ன? இதனால் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்” என கூறியிருந்தார். மேலும் பதவெகவினர் போராட்டம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக அவர் தற்போது உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இது விரைவில் விசாரைணக்கு வர உள்ளது.