Home » பச்சை சுண்டைக்காய் முதல் பாலக்கீரை வரை! ஹீமோகுளோபினை அதிகரிக்கும் உணவுகள் யாவை?

பச்சை சுண்டைக்காய் முதல் பாலக்கீரை வரை! ஹீமோகுளோபினை அதிகரிக்கும் உணவுகள் யாவை?

by admin

ஹீமோகுளோபினின் அளவானது ரத்தத்தில் குறைவாக இருந்தால் உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் குறைவாக இருக்கும் என சொல்லப்படுகிறது. எனவே ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் குறைபாட்டை அதிகரிப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

இதுகுறித்து மகப்பேறு மருத்துவர் திவ்யா அருள் என்பவர் கூறியிருப்பதாவது: ஹீமோகுளோபின் குறைபாட்டை எப்படி போக்குவது? ஹீமோகுளோபின் என்பது ஹீம் என்ற இரும்புச்சத்து நிறைந்த க்ளோபின் என்ற புரதத்தினால் ஆகப்பட்ட செல்கள் ஆகும்.

இவை தான் நம் உடலில் உள்ள இதயத்திலிருந்து ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜனை கொண்டு சேர்க்கும் வேலையைச் செய்கிறது. ஹீமோகுளோபின் அளவு இரத்தத்தில் குறைவாக இருந்தால் உடல் உறுப்புகளின் செயல்பாடு குறைவாக இருக்கும்.

ரத்த சோகை

வயதானவர்களுக்கு இரத்த சோகை காரணமாக இருதயம் பாதிப்பு அடைவதுண்டு. பெண்களுக்கு அதிகமாக கர்ப்பப்பை பாதிப்படையும். மாதவிடாய் கோளாறு காரணமாக கர்ப்பப்பை வீக்கம் ஏற்படும். ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதை IRON DEFICIENCY ANAEMIA என்று சொல்லப்படும். இரத்தத்தில் இரும்புச்சத்து மற்றும் புரதச்சத்து குறைபாடு இரண்டும் சரியாக வேண்டும். ஆதலால் ஹீமோகுளோபின் குறைபாடு சீராக முதலில் புரதச்சத்து நிறைந்த பயறு வகைகள் முக்கியமாக ராஜ்மா, கொண்டைக் கடலை, பாதாம், முட்டை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இரும்புச் சத்து

இரும்புச் சத்து நிறைந்த முருங்கை கீரை, அத்திப்பழம், புதினா, கொத்தமல்லி மற்றும் பீட்ரூட், உலர் திராட்சை, பேரீச்சம் பழம், பாலக்கீரை ஆகியவற்றையும் தொடர்ந்து உண்ண வேண்டும். பச்சை சுண்டைக்காய், இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவாகும். வாரம் இருமுறை முறை பச்சை சுண்டைக்காய் நூறு கிராம் அளவு எடுத்து கொள்ள வெஜிடேரியனில் நல்ல இரும்பு சத்து. அசைவ உணவுகளில் ஆட்டின் கல்லீரல் மற்றும் மண்ணீரல் வாரம் இருமுறை எடுத்து கொள்ள வேண்டும். இதில் முருங்கை கீரையில் புரதச்சத்தும் இரும்புச்சத்து இரண்டுமே இருக்கிறது.

டிரை நட்ஸ்

கூடவே.. ஃபோலிக் ஆசிட் சத்துள்ள உணவுகளான உலர்ந்த நட்ஸ்களை சாப்பிடுவது ஜீரண மண்டலத்தில் இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதைக் கூட்டுகிறது. உணவில் புளி சேர்ப்பதை முற்றிலும் நிறுத்த வேண்டும். ஜீரண மண்டலத்தில் அமிலத்தன்மை கூடினால் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படாமல் மலமாக வெளியேறும். குடற்புழு மாத்திரைகள் எடுத்துக் கொண்டு குடலை பாதுகாப்பாக வைக்க வேண்டும். அப்போது தான் உண்ணும் உணவில் உள்ள சத்துக்கள் இரத்தத்தில் சேரும்.

நடைபயிற்சி

தினமும் மிதமான நடைபயிற்சி செய்வது நம் உடலில் இரத்த ஓட்டம் சீராக இயங்க உதவுகிறது.. இரத்தசோகையும் விரைவில் குணமாகும். ஒழுங்கற்ற மாதவிடாய் கோளாறுகள் சீராக உதவும். ஹீமோகுளோபின் அளவு உணவு முறை மூலமாக சீராகவில்லை என்றாலோ இரத்த சோகையின் உடற் தொந்தரவுகள் அதிகமாக காணப்படும் போதோ Iron ascorbate மற்றும் iron fumarate போன்ற மூலக்கூறுகளைக் கொண்ட இரும்புச்சத்து மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.. கர்ப்ப காலத்திலோ ஏதேனும் அறுவை சிகிச்சை தேவைப்படும் போது இரத்த சோகை அதிகமாக இருக்கும் போதோ IRON SUCROSE வகை மருந்துகள் குளுக்கோஸ் திரவத்துடன் ரத்த நாளம் மூலமாக உடலில் செலுத்த வேண்டும். இவை அதிக பட்ச இரத்த சோகை நோய் காரணமாக ஏற்படும் உறுப்புகளின் பாதிப்பை பெருமளவு குறைக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment