Home » ஆவின் விற்பனை குறித்து தவறான தகவல் பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு

ஆவின் விற்பனை குறித்து தவறான தகவல் பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு

by admin

ஆவின் பால் தினசரி விற்பனை, 16 லட்சம் லிட்டர் என்பது தவறானது. தினசரி 14.5 லட்சம் லிட்டர்தான் விற்பனையாகிறது’ என, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்கத் தலைவர் பொன்னுசாமி குற்றஞ் சாட்டியுள்ளார்.

இது குறித்து, அவர் கூறியதாவது:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், தினசரி 16 லட்சம் லிட்டர் பால் விற்கப்படுவதாக, ஆவின் நிர்வாகம் மற்றும் பால்வளத் துறை அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது; இது தவறான தகவல். தினசரி ஆவின் பால் விற்பனை, 14.5 லட்சத்தை கூட தாண்டவில்லை.

கடந்த ஆட்சியில், 12,000 பால் சொசைட்டிகள் இருந்தன. தற்போது அவை, 9,200 ஆக குறைந்துள்ளன. அதேபோல், 4.50 லட்சம் விவசாயிகள், ஆவினுக்கு பால் கொடுத்து வந்த நிலையில், தற்போது 3.45 லட்சம் விவசாயிகள் மட்டுமே, ஆவினுக்கு பால் கொடுத்து வருகின்றனர்.

அதோடு, கடந்த நான்கு மாதங்களாக, ஆவினுக்கு பால் வழங்கி வரும் விவசாயிகளுக்கு, ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை. அதனால், தற்போது ஆவின் பால் கொள்முதல் குறைந்துள்ளது. விற்பனையும் குறைந்துள்ளது.

ஆனால், பால் விற்பனை குறையவில்லை என, ஆவின் அதிகாரிகள் பொய்கூறுவது கண்டிக்கத்தக்கது. தினசரி விற்பனைக்கு, மாதவரம், அம்பத்துார், சோழிங்கநல்லுார் ஆகிய பால் பண்ணைகளில் இருந்தே, 14.5 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்து, விநியோகம் செய்ய முடியும்.

ஆனால், அவ்வாறு செய்யாமல், விழுப்புரம் மாவட்ட ஆவின் பால் பண்ணையில் 45,000; பெரம்பலுார் மாவட்டம், பாடாலுார் பால் பண்ணையில் 7,000 லிட்டர் என, தினசரி 52,000 லிட்டர், ஆவின் பால் பாக்கெட்டுகள் சென்னை கொண்டு வரப்படுகின்றன.

அதற்காக, எட்டு ஒப்பந்த வாடகை வாகனங்கள் வாயிலாக, லிட்டருக்கு 2 ரூபாய் என, தினசரி 90,000 ரூபாய் வீதம், ஆண்டுக்கு 3.28 கோடி ரூபாய், விழுப்புரம் மாவட்ட ஆவினுக்கு, இணையத்தின் தரப்பில் இருந்து வழங்கப்படுகிறது.

இதன் வழியே, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, ஆவின் அதிகாரிகள், மிகப்பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இதற்கு காரணமான, ஆவின் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Articles

Leave a Comment